நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்பு! – அமைச்சர் அர்ஜூன பரபரப்புக் குற்றச்சாட்டு
“நல்லாட்சி அரசின் படுதோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே பொறுப்புக் கூற வேண்டும்.”
– இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின்போது மக்கள் பெரிதாக எதனையும் அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
ஜனநாயகம் நிலை நிறுத்தப்படவேண்டும். ஊழல்வாதிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டது.
எனினும், எமது அரசால் அதனைச் செய்ய முடியாமல் போனது.
இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே பொறுப்புக் கூற வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஜனாதிபதி கருதினால் அது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவளிக்கத் தயாராகவுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.