ஐ.நா. தீர்மானத்தை செயற்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது இலங்கை அரசு! – உலகத் தமிழர் பேரவை சாடல்
இலங்கையின் புதிய இராணுவப் பிரதானியின் நியமனம், ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவப் பிரதானியாகச் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“இலங்கை இராணுவத்தின் பிரதானியாகச் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தமிழ் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இத்தகைய நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனிவாவில் கூடுதல் கவனம் செலுத்திப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அதுமாத்திரமின்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை உண்மையாக நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது என்பதை இந்த நியமனம் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளது” – என்றுள்ளது.