அருள்சாமியின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – இராதா இரங்கல்
மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் இந்த சமூகத்திற்கு வேண்டப்பட்ட அக்கறையுடன் சேவையாற்றிய ஒருவராகவே மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான சந்தனம் அருள்சாமி திகழ்ந்தார்.
அவரது மறைவு அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பு என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
![](https://i2.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2019/01/arul-saamy-239x300.jpg?resize=239%2C300&ssl=1)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினூடாக அரசியல் தொழிற்சங்க பணிகளை ஆரம்பித்த அவரின் மும்மொழிப்புலமை நிர்வாக ஆற்றல் பேச்சாற்றல் அவரை உயர்வுக்கு இட்டுச்சென்றது.
பின்னாளில் மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளராக அமரர் பெ.சந்திரசேகரனோடு இணைந்து அவர் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் அவரை மேலும் அடுத்த கட்ட உயர்வுக்கு கொண்டு சென்றது.
மத்திய மாகாண சபை உறுப்பினராக மத்திய மாகாண கல்வியமைச்சராக தொடர்ந்து அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கும் அவரே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அரசியல் அந்தஸ்த்துள்ள பதவிகள் அனைத்தையும் பெற்றபோது அவரால் எமது சமூகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் தனது பெயரை ஆழமாக பதித்து பல்வேறு சேவைகளை ஆற்றினார்.
இன்று மலையகத்தில் தொழிற்சங்க அனுபவம் வாய்ந்த மிகச் சிலரில் மிக முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். அன்னாரின் மறைவு மலையக அரசியலிலும் தொழிற்சங்கத்துறைக்கும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் என அவரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.