9 வயது மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்த தாய் கைது!
9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்தனர் எனச் சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார் எனக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், 5 வருடங்களுக்கு முன்பு சிறுமியை தங்கையிடம் ஒப்படைத்து விட்டதாகவும் குறித்த தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமியின் புதைக்கப்பட்ட சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.