இராதாவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு வெளிநாடுகளிலிருந்தும் கோரிக்கை!
இராதா கிருஸ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்குமாறு சர்வதேச மட்டத்திலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.
வெளிநாடுகளில் இயங்கும் இந்து அமைப்புகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆகியன உட்பட மேலும் பல தரப்புகளிலிருந்தே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
” கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்தபோது வடக்கு, தெற்கு, மலையகம் என எவ்வித பாகுபாடுமின்றி சிறந்த சேவையை வழங்கிய இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டும்.
இதைபெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலையிடவேண்டும்.” என்று மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றததால் ஐ. தே.க. அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கும் இராதாகிருஸ்ணனை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என்றும்,
இன்று அல்லது நாளை சந்திப்பு இடம்பெறும் என்றும் ம.ம.மு. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அதேவேளை, இராதாகிருஸ்ணனுக்கு அமைச்சுப் பதவியை வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், அரசுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்று மலையக சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கொட்டகலை நிருபர்