ரணில் பிரதமராக இருக்க பெரும்பான்மை உள்ளது! ஜனாதிபதிக்கு சபாநாயகர் அறிவிப்பு!! – மைத்திரி மௌனம்; பதில் எதுவுமில்லை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கின்றது எனத் தெரிவிக்கும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் நேற்று மாலை அனுப்பிவைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் அடிப்படையில் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும் சபாநாயகர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (சபாநாயகர் உட்பட) ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால் கூட அவரைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனினும், சபாநாயகர் நேற்று மாலை அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை. அவர் அமைதி காத்து வருகின்றார்.