மைத்திரியின் கைகளினால் கலாபூஷண விருதை ஏற்கவேமாட்டேன்! நிகழ்வைப் புறக்கணிக்க பிரபல கலைஞர் முடிவு!!
‘ஜனநாயகத்துடன் விளையாடும் ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவின் கைகளினால் கலாபூஷண விருதைப்பெறுவதற்கு விரும்பவில்லை. எனவே, குறித்த நிகழ்வை நான் புறக்கணிக்க தீர்மானித்துள்ளேன் – என்று பிரபல கலைஞர் டப்ளியூ ஜயசிறி அறிவித்துள்ளார்.
கலாபூஷண அரச விருது வழங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, கொழும்பு – 07, நெளும் பொக்குண தாமரைத் தடாக கலை அரங்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
கலாச்சார, உள்ளக அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்தே இக் கலாபூஷண அரச விருது வழங்கல் வைபவத்தை, இம்முறை 34 ஆவது முறையாக நடத்தவுள்ளன.
இந்நிகழ்வையே தான் புறக்கணிக்கபோவதாக முகநூலில் அறிவிப்பு விடுத்துள்ளார் ஜயசிறி. ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே தன்னால் இம்முடிவு எடுக்கப்பட்டது எனவும் கூறினார்.