இடைக்காலத் தடைக்கு எதிராக மஹிந்த மேன்முறையீட்டு மனு!
பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கு மஹிந்த அணியினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு அரசமைப்புக்கு எதிரானது என்றும், இதுபோன்ற தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் மனுதாரர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார்.