மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்தார் வசந்த!
சுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றார்.
இதேவேளை, பதவி விலகல் இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு நேற்று வசந்த சேனநாயக்க அனுப்பிவைத்தார்.
“கட்சி தாவல் செய்தமைக்கு இரு பிரதான கட்சிகளிடமும் மன்னிப்புக் கோருகின்றேன். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். இனி ஐ.தே.கவுடன் இருப்பேன்” என்று ஐ.தே.க. நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் வசந்த சேனநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க, கடந்த மாதம் மைத்திரி – மஹிந்த கூட்டணியில் இணைந்து அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார்.
பின்னர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பிய அவர், கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.