மாலைதீவு ஜனாதிபதி கொலை முயற்சி – சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர் நாடு திரும்பினார்!
மாலைத்தீவில் மூன்று வருட காலம் சிறைவாசம் அனுபவித்து வந்த, லஹிரு மதுஷங்க எனும் இலங்கையர், மாலைத்தீவு “மாபூசி” சிறைச்சாலையிலிருந்து நேற்று முன் தினம் (21) விடுதலை பெற்று, நேற்று (22) மாலை இலங்கை வந்தடைந்தார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விடா முயற்சியின் பயனாகவே, இவர் விடுதலை பெற்று, நேற்று (22) இலங்கை வந்து சேர்ந்தார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபா, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மது சாலிஹ், மாலை தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் ஆகியோருடன், இவ்விவகாரம் தொடர்பில் அடிக்கடி நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதி பலனாகவே, இவர், மாலைத்தீவு அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் (21) இவர் விடுதலையானதைக் கேள்வியுற்ற அமைச்சர், உடனடியாக நேற்று முன் தினமே அவரது சொந்தச் செலவில், மாலை தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அத்துடன், இவர் அமைச்சருடனேயே நேற்று இலங்கை வந்தடைந்தார்.
இவரை வரவேற்பதற்காக, நேற்று இவரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமை, கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர், மாலைத்தீவில் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.