ரணிலை மீண்டும் பிரதமராக்குவதே இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வு! – ஐ.நாவில் பாக்கியசோதி எடுத்துரைப்பு
ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு என ஐ.நாவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று வியாழக்கிழமை விவாதம் ஒன்று நடைபெற்றது.
‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில் மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுடன், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதாகும். அத்தோடு தற்போதைய அரசியல் நெருக்கடியானது வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல், சுய தணிக்கை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற கடந்த காலத்தில் பரவலாகக் காணப்பட்ட கலாசாரத்துக்கு வழிகோலும் வகையில் காணப்படுகின்றது” – என்றார்.
இந்த மாநாடு இன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.