கூட்டமைப்பு – ஜே.வி.பி. இன்று அவசர சந்திப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.
பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், மஹிந்தவுக்கு எதிரான ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன் பின்னணியில் இன்று நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இதேவேளை, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.