களமிறங்கிய ஐ.நாவின் பிரதிநிதி சம்பந்தனுடனும் முக்கிய சந்திப்பு!
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனையும் நேற்று சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவருடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியலில் நிலவும் குழப்பநிலை தொடர்பில் ஆராயப்பட்டது என இரா.சம்பந்தன் ‘புதுசுடர்’ இணையத்தளத்திடம் இன்று காலை தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் நிலையான தீர்வொன்று எட்டப்படவில்லை.
குறிப்பாகப் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பிரதமர் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்தும் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
தமது ஆதரவு குறித்து வெளிநாடுகளுடன் கலந்தாலோசித்தே தெரிவிக்க முடியும் என ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்ததது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படுகின்றது.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்திப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.