வடக்கின் புதிய ஆளுநராக வித்தியாதரன்? – மஹிந்த அதிரடி முடிவு

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனைத் தெரிவுசெய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார் என்று மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகத் தெரிவு செய்வதற்கு திருகுமார் நடேசன் அழுத்தம் கொடுத்துள்ளார் எனவும், இதனால் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்த அடுத்த கணம் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வடக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தெரிவுசெய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கி இருக்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றவுடன் மறுநாள் சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனது விஜேராம இல்லத்துக்கு வித்தியாதரனை அழைத்திருந்த மஹிந்த, அவருடன் வடக்கின் நிலைமைகள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆலோசராக இருந்து சுகயீனம் காரணமாக இலண்டனில் மரணித்த ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தின் நெருங்கிய நண்பரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், மஹிந்தவின் கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் வைத்து பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தார். பின்னர் சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளின் கடும் அழுத்தங்களினால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *