கொழும்பில் இன்று வன்முறை வெடிக்கலாம்! – அமெரிக்கா எச்சரிக்கை

தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதன் விளைவாக அரசியல் கொந்தளிப்பு, உள்நாட்டு அமைதியின்மை, எதிர்ப்புப் பேரணிகள் அதிகரித்துள்ளன.

பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறும் சாத்தியம் உள்ளது.

அமைதியான நோக்கில் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறவோ, வன்முறைகள் அதிகரிக்கவோ கூடும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகம் நினைவுபடுத்துகின்றது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் மற்றும் பெரியளவில் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் இருந்து விலகி கவனமாக இருத்தல் வேண்டும்.

இலங்கை முழுவதுக்குமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அதேவேளை, இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அலரி மாளிகை, நகர மண்டபம், லிப்டன் சதுக்கம், லிபேர்ட்டி சுற்றுவட்டம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களிலே அதிகளவில் இடம்பெறலாம்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்த்து அவதானமாக இருக்க வேண்டும். உள்ளூர் ஊடகங்களைக் கவனித்து, உங்களைச் சுற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *