அதிர்ச்சியளிக்கின்றது மீ டூ! – பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று ரஹ்மான் கருத்து
மீ டூ விவகாரத்தில் தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் என ஒஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறி உள்ளார்.
சமீபத்தில் ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா மீ டூ பற்றி கருத்துத் தெரிவித்தார். “வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாத் துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றிப் பல பெண்கள் என்னிடம் வந்து புகார் தெரிவித்துள்ளனர்” என்றார். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“மீ டூ இயக்கத்தை கவனித்து வருகின்றேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று சில பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நம் துறை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுவதைப் பார்க்க விரும்புகின்றேன். தைரியமாகப் பேசும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், என் அணியும் உருவாக்கி வருகின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கின்றது. ஆனால் அதைத் தவறாக பயன்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்” என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.