ஜமாலைக் கொன்று உடலை 15 துண்டுகளாக்கி காட்டில் வீசியது சவூதி அரசு! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியை கொலை செய்து உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்.

சவூதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் , நியூயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் கடந்த 2ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை குறித்து சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து, தொடர்ந்து துருக்கி நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி தூதரகத்துக்கு விவாகரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி சென்றுள்ளார். இவரை மீண்டும், ஒக்டோபர் 2ஆம் திகதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். அதற்கமைய கடந்த 2ஆம் திகதி சவூதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. இவரைக் கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட விசேட குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்பவர்கள்தான் இந்த விசேட குழு. ஜமாலை சித்திரவதை செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணர் அவரின் உடலை 15 பகுதிகளாக வெட்டியுள்ளனர். பின்னர், உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்.

தற்போது, வெளியாகியுள்ள இந்தத் தகவல் உலக நாடுகள் மத்தியில் அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, சவூதியை எச்சரித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு ஜேர்மன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது:- “நடந்த சம்பவம் குறித்து சவூதி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” – என்றார்.

மேலும், தற்போது இருக்கும் சூழ்நிலையில் சவூதி அரசுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் தற்காலிகமாக நிறுதி வைக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி நான்காவது பெரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *