மட்டு.மாவட்டத்தில் இவ்வருடம் 8,605 திட்டங்கள் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வருடம் 8 ஆயிரத்து 605 திட்டங்களுக்காக 6505.78 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அவற்றில் 4 ஆயிரத்து 180 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த வருடத்தில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அத்திட்டங்களில் முடிவடையாத திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த மாவட்ட செயலாளர், தொடர்ந்தும் ஒத்துழைப்பை அனைவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
.