நாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது! – பாயிஸ் சுட்டிக்காட்டு
“நாமல் குமாரவின் குரல் பதிவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் படுகொலைகள் குறித்து நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி வரும் நிலை அசாதாரணமானது.”
– இவ்வாறு மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம், அது தொடர்பில் தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அடிக்கடி வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் வாக்கு மூலம் வழங்கி வருகின்றார்.
இவ்வாறான சதி முயற்சிகளில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் ஒருவரை, அரசாங்கம் இன்னும் கைது செய்ய ஏன் மறுக்கின்றது?”எனக் கேள்வி எழுப்பியதுடன், நாலாக சில்வாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.