மலையக மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
மலையகத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி மலையக மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒருங்கமைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும் முதலாளிமார் சம்மேளனம் குறுகிய சம்பள ஏற்றத்தைப் பரிந்துரைத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு வருகின்றது.