‘புலி’ புகழ் பாடிய விஜயகலாவுக்கு எதிரான வழக்கு டிச. 7இல் மீண்டும் விசாரணைக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.