இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க உடன் நடவடிக்கை எடுங்கள்! – மோடிக்கு எடப்பாடி அவசர கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

மீனவர்கள் கைது

மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21ஆம் திகதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நிறைவேற்றப்பட்ட மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் தண்டனை விதித்து இலங்கை ரூபாயில் ரூ.60 லட்சம், அதாவது இந்திய ரூபா மதிப்பில் ரூ.26 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அவர்கள் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

புதிய சட்ட நடைமுறை

நான் ஏற்கனவே கடந்த 7.7.2017 அன்றும், அதைத்தொடர்ந்து மேலும் பல கடிதங்களிலும், இலங்கையில் மீன்வளம் மற்றும் கடல்வளம் சட்டம் 1996 மற்றும் மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த திருத்தங்களையும், அதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

மத்திய அரசின் உதவியோடு, தமிழக அரசு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் திருத்தங்களை அமல்படுத்த முன்வந்திருப்பது, இந்த உணர்ச்சிகரமான பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை ஏளனம் செய்வதுபோல இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் மனதில் ஒரு குழப்பமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக நடவடிக்கை

எனவே, இலங்கை அரசின் உயர்மட்டத்தில் நம்முடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவும், நமது மீனவர்கள் அனைவரையும் அபராதமோ, சிறைத் தண்டனையோ இல்லாத வகையில் விடுதலை செய்ய, இலங்கை நீதிமன்றங்களில் திறமையாக வாதங்களை நடத்தவும், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இலங்கை சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் 16 மீனவர்களையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். இந்த விடயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *