பிரமுகர்கள் கொலைச் சதி: கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே! – விபரங்களை வெளியிட்டார் விமல்
ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’வின் ஒரு உறுப்பினர் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“இது தொடர்பாக நாம் நடத்திய விசாரணைகளில், இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியரின் பெயர், ராஜேந்திர குமார் என்றும், அவர் ‘றோ’வில் பணியாற்றுகின்றார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இந்தியரின் ‘றோ’ அடையாள அட்டை இலக்கம், RB317217/VJ ஆகும்.
அவர், 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார். இங்கு தொடர்ந்து தங்கியிருந்து ‘றோ’வுக்காக பணியாற்றியுள்ளார்.
அவர் இரண்டு முறை என்னைச் சந்திக்க முயற்சித்துள்ளார். ஆனால், நான் அப்போது வீட்டில் இருக்காததால், என்னைச் சந்திக்க முடியவில்லை.
கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்தியத் தூதரகம் கூறியிருந்தது. இது போன்ற சம்பவங்களைச் சமாளிக்க இது எளிதான வழியாகும்.
இப்போதும் கூட இலங்கையில் ‘றோ’ செயற்படுகின்றது. ஆனால், ஜனாதிபதி இன்னமும் மௌனமான கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்.
‘றோ’வும், புலம்பெயர் தமிழர்களும் இலங்கையில் சில சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதற்கு இது சான்றாக இருக்கின்றது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது” – என்றார்.