ஐ.சி.சிக்கு பதிலடிகொடுக்க தயாராகிறார் சனத்
ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கப்படும் – என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறினார் என சனத் ஜயசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பதிலளிப்பதற்கு 15 ஆம் திகதிலிருந்து 48 மணிநேரம் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயார் என சனத் குறிப்பிட்டுள்ளார்.
“ பணத்திற்காக போட்டிகளை காட்டிக்கொடுத்தல், மைதானத்தை தயார் செய்வதில் மோசடி மற்றும் இது போன்ற குற்றங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை என் மீது குற்றம் சுமத்தவில்லை.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காததிற்காகவே என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விளையாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களில் தான் எப்போதும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டுள்ளேன். எதிர்வரும் காலத்திலும் அவ்வாறே நடந்து கொள்வேன்.
எனினும், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிக்கான பதில்களை வழக்கறிஞர்கள் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்” என்றும் கூறினார்.