கோட்டாவை எதிர்க்கும் வெல்கமவுக்கு மஹிந்த அணி வேட்டு – ஐ.தே.கவின் ஒப்பந்தக்காரர் எனவும் சாடல்!
கோட்டாபய ராஜபக்சவை கடுமையாக விமர்சித்துவரும் குமார வெல்கமமீது கூட்டுஎதிரணி எம்.பிக்கள் இன்று சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டிமாவட்டக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கண்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்தானந்த ஆளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள், குமாரவெல்கமவை நேரடியாக சொற் தாக்குதல் நடத்தினர்.
” அமெரிக்கப் பிரஜையான கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படக்கூடாது” என குமார வெல்கம வலியுறுத்திவருவதுடன், ” இராணுவ ஆட்சிக்கு இடமளிக்ககூடாது” எனவும் கூறிவருகிறார். இதனால் கூட்டுஎதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குமார வெல்கமவை மஹிந்த அணி குறிவைத்து – அவர்மீது தாக்குதல் நடத்திவருகிறது. இடைக்கால அரசமைக்கவும் வெல்கம போர்க்கொடி தூக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ ஐக்கிய தேசியக்கட்சியைப் பலப்படுத்தும் வகையில் குமார வெல்கம கருத்து வெளியிடுகின்றார். தான் என்ன பேசுகிறார் என்பதை அவர் புரிந்துசெயற்படவேண்டும். கூட்டுஎதிரணியை பலவீனப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒப்பந்தக்காரர்போலவே இயங்கிவருகிறார்.
மஹிந்த ராஜபக்சவின் முடிவுக்கு கட்டுப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கநேரிடும்” என்று மஹிந்த அணியினர் விளாசித்தள்ளினர்.