பூஜித அடுத்த வாரம் ‘குட்பாய்’! – புதிய பொலிஸ்மா அதிபராக விக்கிரமசிங்க?

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அடுத்த வாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பூஜித ஜயசுந்தர பதவி விலகிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும், மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த பின்னரும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அறியப்படுகின்றது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க 12 ஆண்டுகளாக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவராவார்.

பூஜித ஜயசுந்தரவும் எஸ்.எம்.விக்கிரமசிங்கவும் உதவி பொலிஸ்மா கண்காணிப்பாளராக, 1985இல் பொலிஸில் இணைந்துகொண்டனர்.

பொலிஸ்மா அதிபர் இலங்ககோனின் பதவிக்காலம் முடிந்தபோது, பூஜித ஜயசுந்தர, எஸ்.எம்.விக்கிரமசிங்க உள்ளிட்ட மூன்று மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதியைப் பெற்றிருந்தனர்.

அரசியலமைப்பு சபையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சபாநாயகரும் அரசியலமைப்பு சபையின் தலைவருமான கரு ஜெயசூரிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்களிப்பில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில், 5 பேர் பூஜித ஜயசுந்தரவுக்கு ஆதரவாகவும், ஒருவர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *