குடும்பத்தை கெடுத்த ‘குடி’! – தற்கொலை முயற்சியில் கணவன் மரணம்; மனைவி உயிருக்குப் போராட்டம்

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கணவனின் குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி வலியுறுத்த ஏற்பட்ட தகராறில் மனைவி சாணிப்பவுடரைக் கரைத்துக் குடித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில், வயது 42. இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் ஆனந்தி, வயது 38. இவர்களுக்கு ஆண் வாரிசு ஒன்றும் உண்டு.

குடிப்பழக்கத்தினால் தினமும் வேலைக்குச் செல்லாமல் குடிப்பது என்று போதைக்கு அடிமையாகிக் கிடந்தார் செந்தில், இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் அல்லாடியது. இதனையடுத்து குடிப்பதை நிறுத்துமாறு கணவனுக்குப் பலமுறை ஆனந்தி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் போதைக்கு அடிமையான எத்தனையோ ஆண்கள் போல இவராலும் நிறுத்த முடியவில்லை.

 

சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ஆனந்தி சாணிப்புவுடர் கரைத்து குடித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரும் சாணிப்பவுடர் குடித்தார். மயங்கி கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். ஆனந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *