கொரோனாவிற்காக திருமணத்தை தள்ளிவைத்து வைத்தியர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் வைரஸ் தாக்கி உயிரிழந்தார்.
29 வயதான டாக்டர் பெங் யூன் ஹவா என்பவரே உயிரிழந்தவர் என வுஹான் சுகாதார அதிகாரிள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் இவரது திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தை ஒத்திவைத்திருந்தார்.
இதற்கிடையில் டாக்டர் பெங் யூன்ஹவா கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளானது கடந்த 25-ஆம் திகதி கண்டறியப்பட்டது. 30-ஆம் திகதி அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதனையடுத்து வுஹான் – ஜின்யன்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர்.
எனினும் எந்த முயற்சியும் பயனளிக்காத நிலையில் டாக்டர் பெங் யூன்{ஹவா நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இவருடன் இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 1700 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.