ஓட்டோ – கார் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி; ஒருவர் உயிருக்குப் போராட்டம்
வவுனியா ஹொரவப்பொத்தாத்தானை வீதியில் ஓட்டோ – கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக திருகோணமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வவுனியா, மயிலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 10 மீற்றர் துராம் ஓட்டோ இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஓட்டோச் சாரதியான எஸ்.இராஜகருணா (வயது – 58), பெரியதம்பனைச் சேர்ந்த த.பாஸ்கரன் (வயது – 42) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
கூமாங்குளத்தைச் சேர்ந்த தெ. விஜிதரன் (வயது 29) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.