சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தால் இரண்டுத் துண்டுகளாக வெட்டிப்போட வேண்டும்
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டிப்போட வேண்டும் என்று மலையாள நடிகர் கொல்லம் துளசி தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவை சேர்ந்த நடிகைகள் சிலர் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என்றார்.
சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதற்கு பெயர் போனவர் கொல்லம் துளசி. முன்னதாக கடந்த வாரம் அவரிடம் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் திலீப் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, மீடியா இதை ஊதிப் பெரிதாக்கிவிட்டது, நாட்டில் பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.