இராணுவம் – அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு: சம்பிக்க கொண்டுவந்த யோசனை ஆரம்பப் புள்ளி என்கிறார் மனோ!

“இராணுவத்தினருக்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கலாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொண்டுவந்த யோசனையைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்க வேண்டியதில்லை. அதனை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கலாம். அதற்குச் சம்பிக்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கலாம்.”

– இவ்வாறு கூறியுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“அரசுக்கு வெளியே போராட்டங்கள் நடக்கின்றன. அதேபோல் அரசுக்கு உள்ளேயும் போராட்டங்கள் நடக்கின்றன. அரசுக்கு வெளியே நடக்கும் போராட்டங்கள் அனைவருக்கும் தெரிகின்றது. ஆனால், அரசுக்கு உள்ளே நடக்கும் போராட்டங்கள் வெளியே தெரிவதில்லை. அரசுக்கு உள்ளே நான் போராட்டங்களை நடத்தி வருகின்றேன்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இராணுவத்துக்கும், அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என ஒரு யோசனையைக் கொண்டுவந்தார். அதனைத் தமிழ் தரப்புக்கள் நிராகரித்துவிட்டன. ஆனால், அவ்வாறு நிராகரிக்கவேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரை அதனை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.

நான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கலந்துரையாடினேன். அப்போது கடத்தல்கள், கொள்ளைகள் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இராணுவத்தையும் சேர்த்தா பொதுமன்னிப்பு கேட்கிறீர்கள் எனக் கேட்டபோது, இல்லை எனக் கூறினார். இவ்வாறு கலந்துரையாடல்களை நடத்தியிருக்கலாம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுக்காமல் நான் இருக்கவில்லை. நான் அரசில் இருந்தாலும் கூட எனது கட்சி உறுப்பினர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றார்கள். ஆகவே எங்கள் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தொடர்ந்தும் அரசியல் கைதிகளுக்காகப் பேசுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *