ஆவா குழுவினரைத் தேடி வேட்டை ! – கொக்குவிலில் களமிறங்கியது விசேட பொலிஸ் அணி
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் இன்று அதிகாலை முதல் கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
யாழில் சட்டம் ஒழுங்கைக் குழப்புவோரைக் கைது செய்யும் நோக்கோடு, கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில், இனம் காணப்பட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்ட தோடு, சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களிடம் சாரதி அனுமதி பத்திரம், அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் தொடர்பில் சுற்றிவளைப்பின்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் யாராவது கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலோ, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலோ எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(யாழ். நிருபர்)