ஆறுமுகனை பழிவாங்கவே செந்திலின் தந்தை கைது – விரைவில் அதிரடி காட்டுவோம்! திகா அணிக்கு ரமேஸ் எச்சரிக்கை
ஆறுமுகன் தொண்டமானை பழிவாங்கும் நோக்கிலேயே செந்தில் தொண்டமானின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், மூன்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதையே தற்போது திரைக்கு வந்துள்ளது என்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பௌதீக வளங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் இளங்கோ தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ செந்தில் தொண்டமானின் தந்தையின் குடும்பம், அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் குடும்பத்தை விட பல மடங்கு கோடிஸ்வரர் குடும்பம். அவருக்கு இவ்வாறாக 6 இலட்சம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள கூடிய அவசியம் இல்லை. எனவே, இதில் அரசியல் பின்னணி இருக்கின்றது.
அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் சரி, இங்குள்ள அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, தொண்டமானின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். இதன்வெளிப்பாடாகத்தான் கைது இடம்பெற்றுள்ளது.
ஆறுமுகன் தொண்டமானின் கை சுத்தமானது. அதுபோன்று சௌமிய மூர்த்தி தொண்டமானின் குடும்பம் கோடிஸ்வரர் குடும்பம் அவர்களின் சொத்துக்களை இழந்தும் கூட ஏனைய சமூகம் போல் நமது சமூகம் வாழ வேண்டும் என சமூக சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இது ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து சேவையாற்றும் போதும், அவர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் போதும் தெரிந்துக் கொண்ட உண்மையாகும்.
மூன்று வருடங்களுக்கு முன் ஆறுமுகன் தொண்டமானை கவிழ்த்துவிட வேண்டும் எனவும், அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் எனவும் எழுத்தப்பட்ட கதை முழுமையாக முடியவில்லை. நான் நினைக்கின்றேன் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் அந்த கதையை முடித்து ஆறுமுகன் தொண்டமான் புதிய படத்தை ரிலீஸ் பன்னுவார்.
அப்போது அணைவரும் பார்க்கலாம். தொண்டமானின் அதிகாரம் தெரியவரும்” என்றார்.
(பத்தனை நிருபர்)