மாகாண சபைத் தேர்தலில் மயில் வசம் வருமாம் கிழக்கு!
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலின்போது, கிழக்கு மாகாண சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என கிண்ணிய நகர சபையின் முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டதரணி ஹில்மி தெரிவித்தார்.
கந்தளாயில் நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதற்கென்று பல மக்களும் கட்சியோடு இணைந்த வண்ணமுள்ளனர்.
எனவே, 44 சதவீத முஸ்லிம் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கட்சியின் தலைமைத்துவத்தோடு. அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றியடைய முடியும்” – என்றார்.