நல்லிணக்கம் மலர கரம்கொடுப்போம் – மைத்திரியிடம் உறுதியளித்தார் பொதுநலவாயச் செயலர்
இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொமன்வெல்த் செயலாளர் நாயகம், பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று கொமன்வெல்த் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்டைச் சந்தித்தார்.இதன் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில், கடந்த மூன்றரை ஆண்டுகளில், நல்லிணக்கம், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல், மனித உரிமைகளை மீள நிலைப்படுத்தல் போன்றவற்றில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
அத்துடன் கொமன்வெல்த் செயலாளர் நாயகத்தை மீண்டும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு கொமன்வெல்த் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.