இலங்கைக்கும் சுனாமி ஆபத்தா? -கரையோரப் பகுதிகளில் சீறிப்பாய்கின்றது கடல் அலை!
இந்தோனேசியாவை சுனாமி தாக்கியுள்ள நிலையில், இலங்கையில் காலி, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் – சில கரையோரப் பகுதிகளில் கடல் அலையின் வேகம் வழமையைவிடவும் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
பிரதான வீதியை நோக்கில் கடல்அலை வந்ததால் பயணிகள் சிலர் அல்லோலகல்லோலப்பட்டனர்.
எனினும், மக்கள் அச்சப்படவேண்டியதில்லை என்றும், இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் விழிப்பாகவே இருக்கின்றது.
இத்திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ பாணந்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றன. புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் தொழிலுக்காக கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்றுள்ளது.