தென்மாகாணத்தில் பயங்கரம்! இருவர் சுட்டுப்படுகொலை!! – விசாரணை வேட்டையில் பொலிஸ்
தென்மாகாணத்தில் இருவேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்காலை மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளிலேயே இனந்தெரியாத குழுக்களால் திட்டமிட்ட அடிப்படையில் – சினிமாப் பாணியில் இக்கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
தங்காலைப் பகுதியிலுள்ள வாகனப் பராமரிப்பு நிலையமொன்றுக்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அதன் உரிமையாளரை சுட்டு வீழ்த்திய பின்னர் – கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொன்றுள்ளனர்.
ரஞ்சித் (வயது – 42) என்பவரே கொலைசெய்யப்பட்டவராவார். சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. தங்காலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் ஹிக்கடுவ தபால் நிலையத்துக்கு அருகாலையில் 37 வயதுடைய நபரொருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவரால் இன்று சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.