பொலிஸ்மா அதிபரின் கழுத்தைக் குறிவைக்கின்றது ‘மைத்திரியின் வாள்’! – இரு வாரங்களுக்குள் பதவி துறக்குமாறு பணிப்பு
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில் பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும், இதன் பிரகாரமே இராஜிநாமா இடம்பெறவுள்ளது என்றும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்யும் சூச்சியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவியிலிருந்து தூக்கும் முடிவை அரச பிரதானியான ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.