நிதி நிறுவனத்துக்குள் புகுந்து கத்திமுனையில் ரூ.18 இலட்சம் கொள்ளை! – சாவகச்சேரியில் துணிகரம்
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி நகர் ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த கொள்ளையர் ஒருவர், பணியாளர்களை அச்சுறுத்திச் சுமார் 18 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தைத் திறந்த பணியாளர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.
இதன்போது கத்தியோடு உள்நுழைந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்திப் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
உடனடியாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை சன நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.