‘சொகுசு கதிரை’: மேல் மாகாண முதல்வரின் முடிவுக்கு ஆளுநர் வேட்டு!
மேல் மாகாண சபைக்கு கூடுதல் விலைக்கு கதிரைகளை கொள்வனவு செய்யும் முடிவை மாகாண ஆளுநரான ஹேமகுமார நாணயக்கார நிராகரித்துள்ளார்.
மேல் மாகாண சபை உறுப்பினர்களுக்காக சொகுசு கதிரைகளை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு மாகாண முதலமைச்சர் எடுத்திருந்த முடிவானது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
ஒரு கதிரையின் விலை பல இலட்சம் ரூபாவைத் தாண்டும் வகையில் அமைந்திருந்ததால் பல தரப்பினரும் போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், சபையின் முடிவு தொடர்பில் பரிசீலிப்பதற்காக ஆளுநர் குழுவொன்றை அமைத்திருந்தார். அந்தக் குழுவின் முடிவின் பிரகாரமே இரத்துச் செய்யும் முடிவை ஆளுநர் எடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“104 கதிரைகளே தேவைப்படுகின்றன. ஆனால், 150 கதிரைகள் வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. விலையும் அதிகம். இதனால்தான் தடுத்து நிறுத்தினேன். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கதிரைகளை உரிய விலைக்கு வாங்குவதே பொருத்தமானகும். மக்களின் பணத்தை வீண்விரயம் செய்ய முடியாது” – என்றார்.