அரசியல் கைதிகளை வைத்து தமிழ்த் தலைவர்கள் பிழைப்பு! – கடும் சீற்றத்துடன் அவர்கள் கருத்து

“தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பி அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். வாக்குத் தேவைக்கு மட்டுமே எம்மை வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர் தமிழ் அரசியல் கைதிகள்.

தேசிய சிறைக் கைதிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்றுவரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் மகஸின், அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்குச் செல்கிறார்கள். செல்லும் வழியில் கூட எம்மை வந்து பார்க்கவில்லை. எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை. இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் எம்மைக் கண்டுகொள்வதாக இல்லை.

அரசியல் கைதிகளாகிய நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் ஒரே சிறை அறையில் இருப்பதாகப் பல தடவை எமது மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தோம். அது தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பான விசேட அமர்வு தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட பரிந்துரை ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். அவர் படையினரைக் காப்பற்றுவதற்காக நேரடியாகச் செல்கின்றார். இந்த நிலையில் எமக்குச் சார்பாகப் பேசுவதற்கு எமது மக்கள் பிரதிநிதிகள் செல்ல வேண்டும். யாரும் அங்கு சென்று எமக்குச் சார்பாகப் பேசுவதற்குத் தயாராக இல்லை. இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை தவறவிடாது எமது பிரதிநிதிகள் ஜெனிவாவுக்குச் சென்று பேச வேண்டும்.

25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு எம்மைப் பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை. வாக்குத் தேவைக்கு மட்டும் எம்மை வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள்.

தேர்தல் நெருங்கும்போதும் போராட்டங்கள், மேடைப் பேச்சுக்களிலும் மட்டும் எமது போராட்டம், தியாகம் தொடர்பில் பல அறிக்கைகளும் கருத்துக்களும் வெளியிடுகின்றார்கள். ஆனால், போராட்டங்களுக்கு காரணமாக இருந்த எமது விடுதலை பற்றி சிந்திப்பதற்குத் தயாராக இல்லை.

புலம்பெயர் உறவுகளின் ஊடாகச் சட்ட உதவிகள் சில கைதிகளுக்குத்தான் கிடைக்கின்றன. ஏனைய கைதிகளுக்குக் கிடைப்பதற்கான ஒழுங்கைக்கூட எமது பிரதிநிதிதிகள் செய்வதாகத் தெரியவில்லை. எமது குடும்பங்களைக் கவனிப்பதற்கும் யாரும் முழு முயற்சி எடுக்கவில்லை.

நாம் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்வதற்கு எம்மிடம் வருகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கை தொடர்பில் அரசியல் கைதிகளாகிய நாம் மிகவும் மனவேதனையுடனும் தாக்கத்துடனும் உள்ளோம். எம்மை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *