இராணுவத்தினர் சுகபோகம்! நாங்களோ நடுத்தெருவில்!! – கேப்பாப்பிலவு மக்கள் விசனம்
“இராணுவம் எமது காணிகளிலுள்ள வருமானங்களைப் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம்.”
– இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள மக்களின் காணிகளை அரசு விடுவித்து தமது வறுமை நிலையைப் போக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்பிலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடத்தைத் தாண்டிய நிலையில் இராணுவ முகாமுக்கு முன்னால் தொடர்கின்றது.
104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, காணிகளை அத்துமீறி பிடித்து வைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானமாகப் பெறுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.