விஜேதாசவின் அமைச்சுப் பதவி பறிபோகிறது
ஆளுங்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராகவும் நீதி அமைச்சராகவும் உள்ள விஜேதாச ராஜபக்சவின் அண்மைக்கால நகர்வுகள் அரசாங்கத்துக்கு எதிரான போக்கை கொண்டுள்ளது.
நீதி அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு அரசாங்கத்தை எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருவதால் இவர்மீது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்பால் சு.கவின் தலைவர் பதவிக்கும் நியமிக்கப்பட்டிருந்தார். என்றாலும், நீதிமன்றத்தின் தடை உத்தரவால் இந்த தீர்மானம் செல்லுபடியாகவில்லை.
இந்த நிலையில் விஜேதாசவின் செயல்பாடுகள் அரசாங்கத்துக்கு தலையிடியாக மாறியுள்ளதால் அவரின் அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்துவந்தனர்.
ஆனால், ஜனாதிபதி இந்த விடயத்தில் மௌனம் காத்துவந்த நிலையில், தற்போது அவரை பதவியில் இருந்து விலகுமாறு கோரியுள்ளதாக சு.கவின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.