கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள்
கனேடிய தீவொன்றில், ஒரே நாளில் சுமார் 2,000 தடவைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
தவிரவும் இந்த நிலநடுக்கங்கள் மிகவும் பெரிய அளவில் இல்லாமல் மிகச்சிறிய ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளன, அதாவது அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளன.
கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக விலகும்போது, இரண்டு தட்டுகளுக்கும் இடையில் சுமார் 1 மீற்றர் நீளமான இடைவெளி உருவாகும்.
அந்த இடைவெளியை நிரப்புவதற்காக, பூமியின் மையப்பகுதியிலிருக்கும் எரிமலைக் குழம்பு மெதுவாக மேலே வந்து, உறைந்து அந்த இடத்தில் பாறையாக மாறி அமர்ந்துவிடுமாம்.
இதன்மூலமாக, புவித்தட்டுகள் விலகிய இடத்தில், ஒரு புதிய கடல் படுகை உருவாகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Seafloor spreading என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் காரணமாகவே இந்த சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பதால் இது தொடர்பாக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.