2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல்?
2024ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலையில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் திகதியை முடிவுசெய்யும் போது அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராவதற்கு, தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் பிற ஆவணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற அடுத்தடுத்த பணிகள் வரும் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர்,
2025 இல் பொது தேர்தல் அரசியலமைப்பின் படி நடைபெறும் என தெளிவுபடுத்தினார். எனினும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.