X தளத்தில் ட்ரெண்டாகும் ‘#Sorry_Pakistan’
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ரிஸ்வான் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பியபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பபட்ட நிலையில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியில் முன்னதாக விளையாடிய பாகிஸதான் 191 ரன்களில் சுருண்டது.
அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிரான ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கத்தை எழுப்பிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் ‘#Sorry_Pakistan’ என்ற ஹேஷ்டேக் மூலம் நேற்றைய சம்பவத்துக்கு பலரும் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.