செல்போன் பார்த்து பார்வை இழந்த பெண்!
ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுதிர் குமார் அதிகநேரம் செல்போன் பார்த்ததால் ஒரு பெண் பார்வை இழந்தது குறித்து டுவிட்டரில் பகிர்ந்து இருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 30 வயதாகும் அந்த பெண்ணின் பெயர் மஞ்சு ஹைதராபாத்தை சேர்ந்தவர். சுமார் 18 மாதங்களாக அவரிடம் பார்வை குறைபாடுக்கான அறிகுறிகள் தெரிந்தன . அவர் இரவில் தூங்குவதற்கு விளக்கை அணைத்த பிறகு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக செல்போன் பார்க்கும் வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார். பகலிலும் அதிக நேரம் செல்போனில் பொழுதை போக்கி இருக்கிறார்.
இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு செல்லும் போது சில வினாடிகள் எதையும் பார்க்க முடியாமல் கண்களில் இருள் சூழ்ந்து தடுமாறி இருக்கிறார். இதேநிலை பல இரவுகள் நீடித்திருக்கிறது . இரவில் திடீரென்று சில வினாடிகள் பார்வையை இழந்ததால் பதறிப் போய் மருத்துவரை நாடி இருக்கிறார் . மருத்துவர் பரிசோதித்தபோது அவருக்கு ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இது கணினிகள் , ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பாகும். கண்களின் பார்வையை முடக்க விடும் சக்தி இதற்கு உண்டு.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், டிஜிட்டல் விஷன் சின்ட்ரோம் என்று இது அழைக்கப்படுகிறது. ஒரு மாத பரிசோதனைக்கு பிறகு இரவில் சில வினாடிகள் பார்வையிழப்பு ஏற்படுவது முற்றிலும் நீங்கி விட்டது. 18 மாதங்கள் மஞ்சு இந்த நோய் அறிகுறியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இப்போது நலமாக இருக்கிறார் என்று டாக்டர் சுதிர் குமார் குறிப்பிட்டுள்ளார்.