எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தால் எடுத்த தீர்மானம்!
எரிபொருள் விலை உயர்வு குறித்த தீர்மானம் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
இன்று பகல் கொழும்பில் எரிசக்தி அமைச்சில் நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
இது சம்பந்தமான தீர்மானம் தன்னால் மாத்திரம் எடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே தீர்மானித்தது.
ஜனாதிபதி, பிரதமர், வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் நாமல் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனவே, இது என்னால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சே வெளியிடும். எனினும், இது தொடர்பான அறிவிப்பை நானே விரும்பி வெளியிட்டேன். பிரதமரின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்றிருந்தார்.
அத்துடன், மொட்டு கட்சியின் கூட்டம் இடம்பெறாமலேயே கட்சியின் செயலாளர் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை விமர்சித்தே சாகர அறிக்கை விடுத்துள்ளார். எனவே, பதவி விலகவேண்டியது அவரா, நானா? என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.