24ஆயிரம் வருடங்கள் உறைந்து கிடந்து உயிர் பிழைத்த விலங்கு!
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/06/FB_IMG_1623422240083.jpg?resize=720%2C377&ssl=1)
24,000 ஆண்டுகளுக்கு மேலாக கடும் குளிரில் உறைந்து கிடந்த சிறிய விலங்கு ஒன்று மீண்டும் உயிர்பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ,டெல்லோய்ட் ரூட்டிஃபேர் (Bdelloid rotifers எனும் இந்த விலங்கு பல கலங்கள் (செல்கள்) கொண்ட ஒரு நுண்ணுயிரி ஆகும். நீண்டகாலம் தாக்குபிடித்து வாழும் ஆற்றலைக் கொண்ட ஒரு விலங்கு இது.
அந்நிலையில் , ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில், கண்டுபிடிக்கப்பட்ட, டெல்லோய்ட் ரூட்டிஃபேர் விலங்கு ஒன்று 24,000 வருடங்களாக கடும்பனியில் உறைந்துகிடந்த நிலையில் மீண்டும் உயிர்ப்படைந்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள அலஸேயா (Alayeza) நதி அருகே அகழ்வு இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட, இந்த விலங்கு கண்டெடுக்கப்பட்டது.
அது குறித்த தகவல் கரன்ட் பயோலஜி (Current Biology) எனும் விஞ்ஞான சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலங்கு 20 பாகை செல்சியஸ் குளிரில் 10 ஆண்டுகள் வரை உறைந்தநிலையில் உயிர்பிழைத்திருக்க முடியும் என வேறு குழுக்களால் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருந்தது.
மேலும் ,தற்போது கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு 23,960 ஆண்டுகள் முதல் 24,485 ஆண்டுகள் பழைமையானவை என கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே உறைந்தநிலையில் மிக நீண்டகாலம் உயிர்பிழைத்த விலங்கும் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.