இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் விகிதம் இந்தியாவை விட அதிகம்!
இந்தியாவை விட இலங்கையில் கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஹிரு சிங்கள செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது நாளாந்தம் 1500க்கும் அதிகமான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
இந்தியாவில் நாளாந்தம் 3 லட்சம் அளவிலானோர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகின்ற போதும், இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இலங்கையின் மக்கள் தொகை என்பவற்றை ஒப்பிடும்போது, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும், அதிகளவான எண்ணிக்கையில் கொவிட் நோயாளர்கள் இருக்கின்றனர்.
இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய எச்சரித்துள்ளார்.